இன்றும் சித்தர்களை வருத்தப் படவைப்பது மனிதனின் அசைவம் உண்ணும் ஆசை, பிற மனிதர்கள்/பொருட்கள் மீதான பொறாமை/எண்ணம், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்கிற மனிதனின் மன நிலை, தன் அகம்பாவத்தால், யோசிக்க முனையாத மனத்தால், தன் வாழ்க்கையை மிக மிக சிக்கலாகிக்கொண்ட நடவடிக்கைகள். இவை அத்தனையும் மிக கொடுமையான கர்மாவை சேர்க்கும் என்று தெரிந்தும், தொடர்ந்து செய்கிறார்கள்.
என்று ஒருவன் தன் வலியை உணர்கிறானோ, அன்று முதல் அவன் திருந்துவதற்கு வாய்ப்பிருக்கிறது. சரியாக புரிந்து கொள், வாய்ப்பிருக்கிறது. எளிய வாழ்க்கையை போதிப்பதே சித்த மார்க்கம். அப்படி வாழத்தொடங்கிவிட்டால். இருப்பதெல்லாம் அதிகமாக தோன்றத் தொடங்கும். அப்பொழுது பிறரை பற்றிய எண்ணம் வந்தால், கர்மா நன்றாக இருந்தால், அதிகமானதை தானம் செய்ய முடியும். அங்கு, புண்ணிய கார்யம் தொடங்குகிறது. நல்ல எண்ணம் எங்கும் பரவ அவன் காரணமாகிறான். அதனால் தான் திருந்துவதும், தொடங்குவதும் ஒருவன் உள்ளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்கிறோம். அப்படி ஆரம்பித்துவிட்டால், அவன் மனம், எண்ணங்கள், செயல்கள், உடல் எல்லாம் ஆரோக்கியமாக இருக்கும். பஞ்ச பூதங்களின் எந்த பாதிப்பும், அவன் உடல் அளவில் தாங்குவது எப்படி என்று படிக்கத் தொடங்கிவிடுவான். பின்னர் அவன் வாழ்க்கையே, இயற்கையாகிவிடும். இந்த இயற்க்கை தன்மையே அவனுக்கு, அவனுள் இருக்கும் இறைவனை அறிமுகப்படுத்தி வைக்கும். அதன் பின்னர் அவன் சுத்தமாகிவிடுவதால், யாருக்காக அவன் வேண்டிக்கொண்டாலும், அது உடனேயே அவர்களுக்கு கைவல்யமாகிவிடும்” என்று ஒரு பேருண்மையை போட்டு உடைத்தார்.
Leave a comment